ஒரு எழுத்தாளனின் நகைச்சுவை உணர்வென்பது வாசகனுக்கு கிடைக்கும் பெரும் மகிழ்ச்சி. ஒருவரிடம் கோபம் கொண்டு அவரை திட்டித்தீர்ப்பதை காட்டிலும் வலிமையானது நகைச்சுவை உணர்வோடு ஒருத்தரை, ஒரு இனத்தை தாக்குவதென்பது அது மேம்போக்காக பகீர் சிரிப்பை மூட்டினாலும் அடியாழத்தில் பற்றி எரியக்கூடியது. இந்த முறைமையில் கதை சொல்லும் கலை எல்லோருக்குமே வாய்ப்பதில்லை அது புனைவின் தேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் சாகசம்.
10 கதைகள் 100 பக்கம் கொண்ட சின்னச்சிறிய தொகுப்பில் வாசிக்கக்கிடைக்கும் கதைகளை இரண்டு வகையறவாக அணுகலாம். யதாரத்தமான இஸ்லாமிய கிராமியத்தின் வாழ்வியலை வெளிக்காட்டியிருப்பது ஒருவகை. தீவிரமான அரசியல் பேசுவது மற்றொரு வகை. தீவிரம் என்பது கத்தி கராராக உரைப்பதல்ல வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதை போன்றது.
ஒய்த்தா மாமா,கள்ளக்கோழி,மறிக்கிடா,தீரதம்,ஆத்துமீன் ஆசை போன்றன முதல் வகை பொன்னெழுத்துப் பீங்கான், அணில்,காக்காமாரும் தேரர்களும்,மும்மான்,கபடப்பறவைகள் என்பவற்றை இரண்டாம் வகையில் சேர்த்தாலும் விடுதலை புலிகள் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் ,சிங்கள, புலிகளால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் அண்மையில் ஏற்பட்ட சிங்கள கலவரங்களை அடிப்படையாக கொண்ட கதைகள் என்பன முறையே பொன்னெழுத்துப் பீங்கான்,மும்மான், காக்காமாரும் தேரர்களும் என்பன நேரடியாக அரசியல் பேசுபவன் அவற்றில் மூன்று கதைகளுமே சொல்லும் முறையில் வெவ்வேறான உடல் அமைப்பை கொண்டது கருவையும் கொண்டமைந்தன
10 கதைகளும் மிகக்குறைந்தளவான பக்கங்களை கொண்டு காணப்பட்டாலும் முழுமையான திருப்தியை தரக்கூடியது ஆனாலும் 'மறிக்கிடா' கதை அவசியமற்ற இடம்பெறுகையாகவே கருதுகிறேன். ஆக அந்த கதையோடு ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறுபட்ட கதையனுபவத்தையும் சொல்லும் முறையையும் கொண்டமைந்திருப்பதனால் ஒரே மூச்சில் வாசித்து முடித்தாலும் அலுப்பு தட்டாதது