பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான்
இலங்கையை சார்ந்த நண்பர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய தீரதம் என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் தான் வாசித்தேன்.அருமையான கதைகள்.அற்புதமான வாசிப்பனுபவம்.சில கதைகள் தோப்பில் முஹம்மது மீரானை நினைவு படுத்தியது.பத்து கதைகள் தான்.ஆனால் பல்வேறு காலங்களின் இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளாக இருக்கிறது.
இன்றைய கதைகள் அனைத்தும் இனவரைவியல் கூறுகளை கொண்டதாக இருக்கிறது.அந்த வகையில் சமகால மோஸ்தராக இத்தன்மை இலங்கை எழுத்தாளர்களிடம் இருப்பது ஒரே அலைவரிசையை காட்டுகிறது.நான் நௌஸாத்தின் அனைத்து கதைகளையும் நன்றாக ரசித்தேன்.ஒய்த்தா மாமா கதை நம் மொழியில் ஒசாவை குறித்து அமைந்திருக்கிறது.விருத்த சேதனம் செய்பவரை,முடித்திருத்துபவரை,மருத்துவம் செய்பவரை ஒசா என்று நமது பகுதியில் அழைக்கிறார்கள்.
அந்த கதையை வாசிக்கும் போது என் ஞாபக பரப்பில் எனக்கு சுன்னத் எடுத்த அந்த சம்பவம் பெரிய சம்பவமாக அமைந்ததை கொண்டு வந்தது.வட்டார மொழியை இலாவகமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார்.என்னை நிலைகுலைய வைத்த கதை பொன்னெழுத்து பீங்கான்.தலைமுறை இடைவெளியை காலமாற்றத்தை துல்லியமாக வெளிபடுத்தி இஸ்லாமிய வாழ்க்கை மதிப்பீட்டை அல்லது வைதீக மரபை காப்பாற்ற எண்ணும் தாயின் உள்ளத்தை காட்டும் சித்திரிப்பு அந்த கதை.
கனகட்சிதமாக பழமைக்கும் புதுமைக்குமான பாலத்தை அறுத்துவிடாமல் இழையோட வைத்திருக்கும் பாங்கு தேர்ந்த கதை சொல்லி என்று நௌஸாத்தை நாம் வியக்கிறோம்.புலிகளின் அராஜகம் முஸ்லீம் மத்தியில் எப்படி பாதிப்புகளை நிகழ்த்தேறியிருக்கிறது என்பதை வலுவாக அழுத்தம் திருத்தமாக இக்கதை வெளிப்படுத்துகிறது.
அதுபோல் தீரதம் கதை அற்புதமான கதை அனுபவத்தை தருகிறது.நிஜாமுதீன் அவ்லியாவின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை தரீக்காவின் முக்கியத்துவத்தை சொல்லிச்செல்லுகிறது.
கபடப்பறவைகள்,ஆத்துமீன் ஆசை,அணில் போன்றவை புதுமை எழுத்தாக இருக்கிறது.இலக்கியத்தரமான கதைகளாக இக்கதைகள் அமைந்திருக்கிறது என்பதே இத்தொகுப்பின் முக்கிய அம்சமாகும்.நௌஸாத்தின் இத்தொகுப்பு தமிழ்சூழலுக்கு நல்ல வாசிப்பனுவத்தை தரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
00